அருள்மிகு போர்மன்னர் ஸ்ரீ போத்தராஜா மற்றும் பரிவார ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மஷார் மதுரா சத்தியபுரம் கிராமத்தில் அமைந்து அருள்பாலிக்கும் போர்மன்னர் ஸ்ரீ போத்தராஜா மற்றும் பரிவார ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தகோடிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து ஸ்ரீ போத்தராஜா சுவாமி அருளைப் பெற்றனர்.
நேற்று கும்பாபிஷேக நிகழ்வுகள் மங்கள இசை, அனுக்ஞை, ஸ்ரீ கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜையுடன் துவங்கியது.
பின்னர் பிரவேசபலி, முதற்கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்ணாஹுதி, தீபாராதனை, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இன்று காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு சிலைகளுக்கு உயிர் தரப்பட்டு மஹா பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு போர்மன்னர் ஸ்ரீ போத்தராஜா மற்றும் பரிவார ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், தீபாராதனை திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
போர்மன்னர் ஸ்ரீ போத்தராஜா ஆலய மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
போத்தராஜா விழா குழுவினர்கள், மஷார் மதுரா சத்தியபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கும்பாபிஷேக நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்தினர்.







Comments
Post a Comment