அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், சு.பொலக்குணம் கிராமத்தில் எழுந்தருளி அருளாட்சி புரிகின்ற அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
நேற்று கும்பாபிஷேக நிகழ்வுகள் மங்கள இசை, அனுக்ஞை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை, புதிய சிலைகள் கண் திறத்தலுடன் துவங்கியது.
பின்னர் வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதற்கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்ணாஹுதி, தீபாராதனை, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இன்று காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு சிலைகளுக்கு உயிர் தரப்பட்டு பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு மூலவர் ஸ்ரீ முத்து மாரியம்மன், விநாயகர், முருகர் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
சு.பொலக்குணம் கிராமம், முத்துமாரியம்மன் நகர் பொதுமக்கள், விழா குழுவினர் கும்பாபிஷேக நிகழ்வினை சிறப்பான முறையில் நடத்தினர்.

Comments
Post a Comment